யாழ். பல்கலைக்கழகத்தில் ஒட்டப்பட்டிருந்த எச்சரிக்கை சுவரொட்டி

இனிவரும் காலங்களில் சமூகவிரோத குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். அத்துடன் பெண்கள் மீது கை வைத்தாலோ அல்லது மாணவர்களுடன் சேட்டை விடுத்தாலோ தமிழ் இளைஞர் படையணியால் தண்டனை வழங்கப்படும் என யாழ். பல்கலைக்கழக சூழலில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இன்று(10) ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியால் அங்கு பரபரப்பான நிலைமை காணப்பட்டது. அந்த சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் உடனடியாக சகல விதமான சமுதாய சீர்கேடுகளும் நிறுத்தப்பட வேண்டும். இளைஞர்கள் மீது பெற்றோர் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் எவராலும் காப்பற்ற முடியாமல் போகும்.

இங்கு இனி வாய்ப் பேச்சிற்கு எதுவும் இல்லை. ஆனால் செயலில் செய்வதற்கு நிறைய உண்டு. மக்கள் அனைவரும் நாம் யார், எமது பண்பாடு கலாசாரம் எது என்று உணர்ந்து எம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டும்.

தமிழர் தேசத்தின் கலை, பண்பாடு, கலாசாரம் இவற்றை கருத்திற் கொள்ளும் அரசாங்கம் மட்டுமே எமக்கு வேண்டும். அத்தோடு எமது கலை கலாசாரத்தைப் பேணிப் பாதுகாப்பது எமது கடமை. இனிவரும் காலங்களில் சமூகவிரோத செயல்களுக்கு, குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்.

பெண்கள் மீது கைவைத்தாலோ அல்லது மணவர்களுடன் சேட்டை விடுத்தாலோ அதற்கு தண்டனை வழங்கப்படும். “தடை கற்கள் உண்டு என்றால் தடை தாண்டும் கால்களும் உண்டு” எனத் தெரிவித்துள்ள அந்த சுவரொட்டியில், தமிழ் இளைஞர் படையணி மண்ணின் மைந்தர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.