யாழ். தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை  நோயாளர்கள் நெருக்கடியில்?

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் ஆளுகைக்குட்பட்ட தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் சிகிச்சை பிரிவில் கடமைபுரியும் எட்டு கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் சிகிச்சைக்கு வரும் புற்றுநோயாளிகளுடன் அடாவடியில் ஈடுபட்டு வருதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சிறீ பவானந்தராஜாவை சந்தித்து முறையிட்டுள்ளனர்.

image0 2 யாழ். தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை  நோயாளர்கள் நெருக்கடியில்?

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கதிரியக்க சிகிச்சை தொழில் நுட்பவியலாளர்கள் நாடு பூராகவும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வருவதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக குறித்த உத்தியோகத்தர்கள் கடமை புரிவது இல்லை.எனினும் புற்று நோய் இனங்காணப்பட்ட நோயாளிக்கு குறித்த கதிரியக்க சிகிச்சை அளிக்காவிடில் மீண்டும் புற்றுநோய் பரவும் நிலை காணப்படுகின்ற நிலையில், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக புற்றுநோய் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை குறித்த உத்தியோகத்தர்கள் அடாவடியில் ஈடுபட்டு திருப்பி அனுப்புகின்றனர்.

குறிப்பாக வடக்கு மாகாணத்தில் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மட்டுமே புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் நிலையமாக காணப்படுகின்றது. மட்டக்களப்பு திருகோணமலை, வவுனியா,மன்னார்,மற்றும் ஏனைய மாவட்டங்களில் இருந்தும் புற்றுநோய் சிகிச்சைக்காக வருகைதரும் நோயாளர்களை குறித்த உத்தியோகத்தர்கள் தங்களால் சிகிச்சை வழங்க முடியாது நாங்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுகிறோம் எனக் கூறி  திருப்பி அனுப்புகின்ற நிலை காணப்படுகிறது. எனினும் குறித்த உத்தியோகத்தர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்காது மேலதிக நேர கொடுப்பனவினை கடந்த இரண்டு மாதங்களாக பெற்றிருப்பதாக வைத்திய சாலை நிர்வாகத்தினரால் சுட்டிக்காட்டப்படுகிறது.

image1 3 யாழ். தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை  நோயாளர்கள் நெருக்கடியில்?

எனவே இன்றைய தினம் புற்றுநோய் சிகிச்சைக்கு சென்று திருப்பி அனுப்பப்பட்ட 5 நோயாளிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜாவை சந்தித்து தமது குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்கள்.

இது தொடர்பில் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில்,

“குறித்த விடயம் தொடர்பில் தமக்கு பல்வேறுபட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பில் சுகாதார அமைச்சு மட்டத்திலும் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்திருக்கிறோம்.

நேற்றைய தினம் கூட குறித்த தொழிற்சங்கத்தினருடன் கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். எனினும் அவர்கள் உடன் படுவதாக இல்லை. ஆனால் விரைவில் குறித்த உத்தியோகத்தர்கள் 8 பேருக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடந்த இரண்டு மாதங்களாக அந்த எட்டு உத்தியோகத்தர்களும் மேலதிக கொடுப்பனவை பெற்றமை சம்பந்தமாக அதனை மீள் பரிசீலனை செய்வதற்கான அறிக்கை ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆளுகைக்குட்பட்ட தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை 20 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் அங்கேயுள்ள வைத்திய நிபுணர்களினாலேயே குறித்த உத்தியோகத்தர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். இனிவரும் காலத்தில் அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நோயாளர்கள் இனிமேலும் பாதிக்கப்படாத வண்ணம் வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.