யாழில் தனியார் காணியில் புத்த விகாரை கட்டும் இராணுவத்தினர்

யாழ்ப்பாணம் தையிட்டிப் பகுதியில் தனியார் காணியொன்றில் இராணுவம் பௌத்த விகாரை ஒன்றை கட்டுவதற்கு எடுத்திருக்கும் முயற்சியை சட்ட ரீதியாக தடுப்பதற்கு முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வலி.வடக்கு தையிட்டிப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தினை ஆக்கிரமித்து அதில் விகாரை ஒன்றை அமைப்பதற்கும் இராணுவத்தினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முயற்சியை அரசியல்வாதிகளும், சமூக அக்கறை கொண்ட சட்டத்தரணிகளும் இந்த நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வலி.வடக்கு பிரதேச சபைக்கு எழுத்து மூலமான முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் குறித்த விகாரையினை அமைக்கும் நடவடிக்கையில் இராணுவம் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது.

எனவே இந்த முயற்சியை சட்ட ரீதியாக தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் மேலும் கோரிக்கை விடுத்தார்.