மாவீரர் நாளை ஏற்பாடு செய்தவர்களிடம் ரி.ஐ.டி.யினர் துருவித் துருவி விசாரணை

முல்லைத்தீவு- தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாளை ஏற்பாடு செய்தவர்களிடம் சிறீலங்கா அரசின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த மாவீரர் துயிலும் இல்லப் பணிக் குழுத் தலைவர் தம்பையா யோகேஸ்வரன், பணிக் குழுச் செயலாளர் சுந்தரலிங்கம் யோகலிங்கம் ஆகியோரிடமே பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர்.

நேற்று முன்தினம் முற்பகல் 11. 30 மணியளவில் பணிக் குழுத் தலைவரின் இல்லத்துக்குச் சென்ற பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர், தலைவர் தம்பையா யோகேஸ்வரன், பணிக் குழுச் செயலாளர் சுந்தரலிங்கம் யோகலிங்கம் ஆகியோரைச் சுமார் 4 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தினர்.

கடந்த புதன்கிழமை, மன்னாரில் மாவீரர் நாளை ஒழுங்கு செய்தமை தொடர்பாக சிவகரனிடம் இரண்டு மணிநேரம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.