வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மீது வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுத்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று நண்பகல் 1.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒரு மணி நேரத்துக்குள்ளேயே சமரசமாகத் தீர்த்துவைக்கப்பட்டதால், வழக்கு முடிவுக்கு வந்தது.
விக்கினேஸ்வரன் மீதான வழக்கை வாபஸ் பெறுவதற்காக டெனீஸ்வரன் தரப்பில் நேற்று முன்வைத்த நிபந்தனைகளில் இரண்டை வாபஸ் பெறுதாக டெனீஸ்வரன் தரப்பு இன்று விசாரணை ஆரம்பமான போது நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியது.
உச்ச நீதிமன்றத்தில் டெனீஸ்வரன் மீது தொடுத்திருந்த வழக்கை விக்கினேஸ்வரன் வாபஸ் பெற்றால் போதுமானது என டெனீஸ்வரன் தரப்பு தெரிவித்ததை விக்கினேஸ்வரன் தரப்பு ஏற்றுக்கொண்டதையடுத்து இந்த வழக்கு சமரசமாகத் தீர்த்துவைப்பதற்கான சூழ்நிலை உருவானது. இதனையடுத்து நீதியரசர்கள் இருவரும் இது தொடர்பாக ஆலோசனை நடத்திய பின்னர் வழக்கு விசாரணை முடிவுக்கு வருவதாக அறிவித்தனர்.
இதேவேளையில், “இது ஒரு துன்பியல் சம்பவம். இரு தரப்பாருக்கும் இடையே புரிந்துணர்வு இல்லாமையால் இதுவரையில் இவ்விடயம் தாமதிக்கப்பட்டுவந்துள்ளது” என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
“இது ஒரு துன்பியல் சம்பவம். அதாவது, தரப்பாருக்கு இடையே புரிந்துணர்வு இல்லாமையால் இதுவரையில் இவ்விடயம் தாமதிக்கப்பட்டுவந்துள்ளது.
அண்மையில் நான் கதிர்காமத்தில் இருந்த போது, டெனீஸ்வரன் தொலைபேசியூடாக என்னை அழைத்தார். அப்போது நான் அவருடன் பேசியபோது ஒரு விடயத்தை அறிந்துகொண்டேன். தன்னை குற்றவாளியாக நினைத்து அமைச்சர் குழாமிலிருந்து நான் அவரை வெளியேற்றியதாக அவர் நினைத்திருந்தார்.
ஆனால், அவரை வெளியேற்றியமைக்கான காரணம் அவர் சம்பந்தமாக முறைப்பாடு செய்த ஒருவர் அமைச்சரவையில் அப்போது இருந்தார். குற்றம் சுமத்தியவரையும், குற்றம் சுமத்தப்பட்டவரையும் அமைச்சரவையில் வைத்திருத்தல் உசிதம் இல்லை என்ற காரணத்தினால்தான் நான் அவரை பதவியிலிருந்து நீக்கினேன் என்ற விடயத்தை அவருக்கு அறியப்படுத்தினேன்.
அதன்பின்னர் பல சம்பவங்கள் நடைபெற்று இன்று வழக்கை அவர் வாபஸ் பெற்றுக்கொண்டார். அதற்கு ஈடாக நாங்கள் உச்ச நீதிமன்ற மேன்முறையீட்டு மனுவை கைவாங்குவதாக மன்றில் தெரிவித்தோம். இதன் அடிப்படையில் நீதிமன்றம் மன்றை அவமதித்தமை சம்பந்தமான வழக்கை கைவாங்க அனுமதியளித்தது.”