Home உலகச் செய்திகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளை குறி வைக்கும் ஐஎஸ்ஐஎஸ் மலேசிய காவல்துறை தகவல்

தென்கிழக்கு ஆசிய நாடுகளை குறி வைக்கும் ஐஎஸ்ஐஎஸ் மலேசிய காவல்துறை தகவல்

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பக்தாதி இறந்து விட்டாலும், அந்த அமைப்பு தொடர்ந்து தீவிரமாகச் செயற்படும் என நம்புவதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

எனவே, மலேசிய பொலிசாரும் பாதுகாப்புப் படையினரும் உச்சபட்ச விழிப்பு நிலையில் இருப்பதாகவும், ஐஎஸ் அமைப்பின் அச்சுறுத்தல் நீடிப்பதாகவும் மலேசிய காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் துணை இயக்குநர் டத்தோ அயோப் கான் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐஎஸ் அமைப்பின் வேகம் இனி சற்றே குறையக்கூடும் என்றாலும், தென்கிழக்கு ஆசியாவில் தங்களுக்கான ஒரு தளத்தை அமைப்பதில் அவர்கள் இன்னும் தீவிரமாகச் செயற்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

ஐஎஸ் சித்தாந்தம் முற்றிலுமாக முடக்கப்படும் வரை ஆபத்து நீடிக்கும்.

கடந்த 2017இல், சிரியாவில் வீழ்ச்சி கண்ட பின்னர், தென்கிழக்கு ஆசியாவில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள ஐஎஸ் அமைப்பு திட்டமிட்டதை மலேசிய பொலிசார் முன்பே அறிந்திருப்பதாகக் குறிப்பிட்ட அயோப் கான், அந்த அமைப்பு தெற்கு பிலிப்பைன்சில் காலூன்ற அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

சுரபயாவிலும், தெற்கு பிலிப்பைன்சிலும் கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களை ஐஎஸ் அமைப்பின் எதிர்காலத் திட்டங்களுக்கான சான்றுகளாக கருதலாம் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் தங்களுடைய புலனாய்வுத் தகவல்களை ஒருங்கிணைப்பதன் மூலம் தீவிரவாத தாக்குதல்களைத் தவிர்க்கவும் தடுக்கவும் முடியும் என்று அயோப் கான் குறிப்பிட்டார்.

அபுபக்கர் அல்-பாக்தாதி உயிரிழந்து விட்டாலும், ஐஎஸ் அமைப்பு தொடர்ந்து செயற்படும் என்றே கருத வேண்டியுள்ளது. அந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள தலைமையிடம் இருந்து இனி உத்தரவுகள் வராமல் போகலாம். ஆனால் அந்த அமைப்பின் சித்தாந்தங்களைப் பின்பற்றும் தீவிர போக்குடைய நபர்களால் தாக்குதல்கள் அரங்கேற்றப்பட வாய்ப்புள்ளது.

எனவே அந்த சித்தாந்தம் முடக்கப்படும் வரை ஐஎஸ் மற்றும் இதர தீவிரவாதக் குழுக்களால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் நீடிக்கவே செய்யும். ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னரும், அல்கொய்தா அமைப்பால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் நீடித்தது என்று டத்தோ அயோப் கான் சுட்டிக்காட்டினார்.

ஐஎஸ் அமைப்பு தொடர்பான காணொளிகள் மற்றும் போதனைகள், சமூகவலைத்தளங்கள், மற்ற தகவல் பரிமாற்றச் செயலிகள் மூலம் பரவுகின்றனவா? என மலேசிய புலனாய்வு முகாமைகள் தீவிரமாக கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது தீவிரவாதிகள் டெலிகிராம் உள்ளிட்ட செயலிகள் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதாகத் தெரிவித்தார்.

Baghdadi killed தென்கிழக்கு ஆசிய நாடுகளை குறி வைக்கும் ஐஎஸ்ஐஎஸ் மலேசிய காவல்துறை தகவல்இதற்கிடையே, தலைவரை இழந்துள்ள ஐஎஸ் அமைப்பினர், புதிய வியூகங்களுடன் மீண்டும் ஒருங்கிணைந்து செயற்பட முயற்சிப்பார்கள் என்று மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை விரிவுரையாளரான டாக்டர் அஹமட் எல்-முஹமதி கூறுகின்றார்.

அபுபக்கர் அல்-பாக்தாதியின் மரணம் அந்த அமைப்பிற்கு பெரும் இழப்பு தான் என்று குறிப்பிடும் அவர், இனி புதிதாக ஆட்களைச் சேர்ப்பதில் ஐஎஸ் அமைப்பு கவனம் செலுத்த வாய்ப்புள்ளது என்கிறார்.

எனவே அந்த வட்டாரத்தைச் சேர்ந்த நாடுகள் தங்களது பாதுகாப்பு முகாமைகளை விழிப்பு நிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியம். அவர்கள் தற்போது உள்ளதைக் காட்டிலும் மேலும் ஒரு படி அபாயகரமான அமைப்பாக மாறா விட்டாலும், ஆட்களைச் சேர்ப்பதிலும், தங்களது நடவடிக்கைகளைத் திட்டமிடுவதிலும் சாமர்த்தியமாக செயற்பட வாய்ப்புண்டு என்கிறார் அஹமட் எல்-முஹமதி.

ஐஎஸ் அமைப்பு தற்போது தலைவரை இழந்து விட்ட நிலையில், தங்களது பகுதிகளில் அந்த அமைப்பினர் பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதல்களில் ஈடுபடக்கூடும் என மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உட்பட தென்கிழக்கு ஆசிய நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

ஐஎஸ் சித்தாந்தத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து இந்நாடுகள் நீண்ட காலப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கூற்றை ஏற்றுக் கொள்வதாகச் சொல்கின்றார் பிலிப்பைன்ஸ் தற்காப்புத்துறைச் செயலர் டெல்பின் லொரென்சனா.

“அபுபக்கர் அல்-பாக்தாதியின் மரணம் ஐஎஸ் அமைப்பை நிச்சயம் தடுமாறச் செய்யும். எனினும் அந்த அமைப்பின் அச்சுறுத்தல் நீடிக்கும்.” என்கிறார் டெல்பின்.

கடந்த காலங்களில், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இணையம் வழி தீவிர பிரசாரத்தை ஐஎஸ் அமைப்பு மேற்கொண்டு வந்தது. இதன் மூலம் இஸ்லாமிய இளையவர்கள் பலர் அந்த அமைப்பின்பால் கவரப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக்கல்வி பெறாதவர்கள் எனக் கூறப்படுகின்றது.

அதிலும் குறிப்பாக பிலிப்பைன்சின் பிரச்சினைக்குரிய மைண்டானாவோ பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தான் ஐஎஸ் அமைப்பில் ஆர்வம் கொண்டுள்ளதாகத் தெரிகின்றது.

“அபுபக்கர் அல்-பாக்தாதியின் மரணம் ஐஎஸ் அமைப்பிற்கு மிகப் பெரிய அடி தான். எனினும் அந்த அமைப்பின் வீச்சும் ஆழமும் பரவலாக உள்ளது. அதனுடன் ஒப்பிடுகையில், தற்போது அந்த அமைப்பிற்கு ஏற்பட்டிருப்பது தற்காலிகப் பின்னடைவு தான்.“ என்கிறார் டெல்பின்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது ஐஎஸ் அமைப்பு நீண்ட காலமாகவே தன் பார்வையைப் பதித்துள்ளது. மேற்கு ஆபிரிக்கா தொடங்கி, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் ஊடுருவியுள்ள இந்த அமைப்பு, தற்போது மலேசியா போன்ற நாடுகளிலும் ஆதரவாளர்களைப் பெறத் திட்டமிடும் எனக் கூறப்படுகின்றது.

கடந்த ஆண்டு பிலிப்பைன்சில் நிகழ்த்தப்பட்ட நான்கு தற்கொலைத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருப்பதை பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள். மேலும், அந்நாட்டின் மாராவி நகரை ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என எச்சரிக்கின்றார்கள்.

கடந்த 2017ஆம் அண்டு மாராவி நகர் முற்றுகையில், மலேசியா உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்த பலர், பிலிப்பைன்ஸ் படைகளுக்கு எதிராகப் போராடியதாகக் கூறப்படுகின்றது. இதையடுத்து விழித்துக் கொண்ட மலேசிய அரசு, தீவிரவாத குழுக்களுடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் 400இற்கும் மேற்பட்டவர்களை தடுத்து வைத்துள்ளது.

“ஐஎஸ் அமைப்பின் தலைவர் யார் என்பது கவலைக்குரிய விடயம் அல்ல. மாறாக அந்த அமைப்பின் போதனைகளால் ஏற்படக் கூடிய விளைவுகள் குறித்தே கவலைப்பட வேண்டியுள்ளது.

ஐஎஸ் அமைப்பின் தலைவர் குறித்து தற்போது வந்திருப்பது நல்ல செய்தி தான். எனினும் அந்த அமைப்பின் சித்தாந்தம் எந்தளவு பரவியுள்ளது என்பதை ஆராய்வதே முக்கியம்.

இத்தகைய போதனைகளால் சுய தீவிரவாத தன்மையுடன் பலர் தாக்குதல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. இப்போதும்கூட ஐஎஸ் அமைப்பின் போதனைகள் இணையம் வழி பரப்பப்படுகின்றன. பல ஆண்டுகளுக்கு முந்தய ஐஎஸ் அமைப்பின் பிரசுரங்கள், இதழ்கள் ஆகியவை மீண்டும் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன என்று டத்தோ அயோப் கான் எச்சரிக்கின்றார்.

இந்தக் கூற்றை உறுதி செய்வது போல் அல் பாக்தாதியின் மறைவையடுத்து, ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இஸ்லாமிய ஜிகாத் எனப்படும் புனிதப்போர் தனி நபரை சார்ந்து இருக்காது. அது எப்போதுமே உயர்ந்து நிற்கும் என்றும் ஜிகாத் என்றும் நிற்காது என்றும் பலர் பதிவிட்டுள்ளனர்.

தீவிரவாதம் பத்துத் தலை அசுரனைப்போன்றது என்கிறார் அவுஸ்திரேலியப் பிரதமர்.

இந்நிலையில், அல் பாக்தாதியின் மரணம் என்பது எதையும் முடிவிற்கு கொண்டு வந்து விடாது என்று அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.

இது பத்துத் தலை கொண்ட அசுரனைப் போன்றது. ஒரு தலையை வெட்டினால் மற்றொரு தலை எழுந்து நிற்கும் என்று அவர் கூறியுள்ளார்.

உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள நாடான இந்தோனேசியாவில் தீவிரவாதக் குழுக்கள் மீண்டும் எழுச்சி பெறுவதாகக் கூறப்படுகின்றது. இதையடுத்து தீவிரவாதத்திற்கு எதிரான சட்டங்களின் கீழ் கடும் நடவடிக்கை எடுத்துள்ள அந்நாட்டு அரசு, நூற்றுக் கணக்கானோரை சந்தேகத்தின் பேரில் தடுத்து வைத்துள்ளது.

ஆயிரக் கணக்கான இந்தோனேசிய இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பால் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 500 பேர் சிரியாவில் இயங்கும் அந்த அமைப்பில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், ஐஎஸ் தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அதை எதிர்கொள்ள தங்களது புலனாய்வு முகமைகள் தயாராக உள்ளளதாக இந்தோனேசியா தெரிவித்துள்ளது.

இது ஒரு போர். எனவே பதில் தாக்குதல் என்பது வழக்கமான ஒன்று தான். நாட்டின் பாதுகாப்பு என்று வரும் பட்சத்தில் நிச்சயம் அதை உறுதிப்படுத்துவோம் என்று இந்தோனேசிய புலனாய்வு முகமையின் செய்தித் தொடர்பாளர் வாவான் புர்வான்டோ தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் அமைப்பால் அச்சுறுத்தல் நீடிக்கின்றது எனக் கூறியுள்ள மலேசியா, தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தயக்கமின்றி மேற்கொண்டு வருவதாகச் சொல்கிறது.

இதன் எதிரொலியாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு வைத்துள்ள குற்ச்சாட்டப்பட்டுள்ள 12 பேரை மலேசிய காவல்துறை கைது செய்துள்ளது.

அவர்களில் 10 பேர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைானவர்களில் இருவர் மலேசியாவின் இருவேறு மாநிலங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர்.

மலேசிய அரசின் இந்நடவடிக்கைக்கு சில தரப்பினர் கடும் எதிர்ப்பும் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றிலுமாக ஒடுக்கப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்து விட்டதாகக் கூறப்படும் நிலையில், அந்த அமைப்புடன் தொடர்புள்ளதாகக் குற்றம் சாட்டி பலரை கைது செய்வது சரியல்ல என அதிருப்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் நாட்டின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என மலேசிய காவல்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Exit mobile version