சொகுசு பங்களாவிலிருந்து சம்மந்தனை வெளியேற்ற அமைச்சரவைப் பத்திரம் வருகிறது-அகரன்

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்காவினால் எதிர்கட்சி தலைவராக இருந்த சம்பந்தன் அவர்களுக்கு தலைநகரின் முக்கிய பகுதியான கொழும்பு-07 அதிஉயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள பௌத்தாலோக மாவத்தையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒன்றரை ஏக்கர் காணியும் சொகுசு பங்களா ஒன்றும் வழங்கப்பட்டது.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபாய ராஜபக்ஸா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் ரணில் விக்கிரமசிங்காவும் அமைச்சர்களும் தங்களது  பதவிகளை ராஜினாமா செய்ததுடன் அவர்கள் பாவித்த அரச பங்களாக்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தையும் ஒப்படைத்திருந்தனர்.

இந் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் மட்டும் எதிர்கட்சி தலைவருக்காக வழங்கப்பட்ட சொகுசு பங்களாவையும் வாகனங்களையும் புதிய அரசாங்கம் மீளக் கையளிக்கும் படி கேட்டும் கையளிக்காது விடாப்பிடியில் இருந்துவருகின்றார். இதனால் அரசு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து சம்பந்தன் அவர்களை அந்த பங்களாவில் இருந்து வெளியேற்றி அரசாங்கம் அதை பொறுப்பெடுக்கும் நிலமைக்கு சம்பந்தன் நடந்து கொண்டமையானது ஒட்டுமொத்த தமிழ் மக்களிற்கும் பெரிய தலைகுனிவையும் அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மகிந்தராஜபக்ஸ அவர்கள் பராளுமன்றத்தில் உரையாற்றும்போது எதிர்கட்சி தலைவருக்காக வளங்கப்பட்ட பங்களாவை சம்பந்தன் அவர்கள் இன்னும் ஒப்படைக்காமல் கையகப்படுத்தி வைத்திருக்கின்றார் என்று பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்கள் கடந்த எழுபது வருடகாலமாக அகிம்சை வழியிலும் ஆயுதப்போராட்ட வழியிலும் அளப்பரிய தியாகங்களை செய்திருக்கின்ற நிலையில்; சம்பந்தனுடைய நடவடிக்கையானது விடுதலைக்காக தம்மை ஆபுதி ஆக்கிக்கொண்ட போராளிகள் பொதுமக்களினுடைய உயிர் தியாகங்களை கொச்சைப்படுத்தியதற்கு சமனான ஒரு செயலாக பார்க்கப்படுகின்றது.

இவ்வாறாக இப்படியான அற்பசொற்ப சலுகைகளுக்காக காலத்திற்கு காலம் தமிழரசுக் கட்சியும் அதனோடு இணைந்திருக்கின்ற பங்காளி கட்சிகளும் தமிழ் மக்கள் நலன் சார்ந்து கிடைத்த சந்தர்ப்பங்களையும் மக்கள் நலன்களுக்காக பேரம்பேச வேண்டிய சந்தர்ப்பங்களையும் இப்படியான சலுகைகளை பெற்றுக்கொண்டு தமிழ் மக்களை நட்டாற்றில் விட்டிருப்பதை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.