குடியேற்ற காலனியம்; இனவழிப்பின் இன்னொரு கரம் – ந.மாலதி

காலனியம் என்றால் உலகில் வாழும் பெரும்தொகையானவர்களுக்கு என்னவென்று தெரியும். 500 ஆண்டுகள் தொடர்ந்த ஐரோப்பிய காலனியம் எவ்வாறு ஐரோப்பாவுக்கு வெளியில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை உருத்தெரியாமல் மாற்றியது என்பதும் இன்று மக்களுக்கு தெரியும். இக்காலனியம் தான்தோன்றித்தனமாக உருவாக்கிய “நாடுகளில்” இன்று தொடரும் தேசியப் போராட்டங்களும் ஓரளவுக்கு எமக்கு தெரியும். இது எமக்கு தெரிந்த காலனியம்.

குடியேற்ற காலனியம் என்றால் என்னவென்று எமக்கு தெரியுமா? லத்தீன் அமெரிக்க நாடுகள், கனடா, ஐ-அமெரிக்கா, அவுஸ்திரேயா, நியூசிலாந்து ஆகியனவே ஐரோப்பிய குடியேற்ற காலனியத்திற்கு உள்ளாகிய இடங்கள். எமது தாயகப் பகுதிகளில் இடம்பெற்றது காலனியம் ஆனால் மேலே சொன்ன இடங்களில் இடம்பெற்றது குடியேற்ற காலனியம்.

எமது பகுதிகளில் இடம்பெற்ற காலனியம் இனவழிப்பு செய்ததா என்பது ஓரளவுக்கு விவாதத்திற்கு உரியது. நிச்சயமாக சில இடங்களில் இனவழிப்பு செய்திருக்கிறது. சாசி தரூர் என்ன கேரளாரவை சேர்ந்த ஒரு அரசியல்வாதி 2015 ஒக்ஸ்ஃபேர்ட் பல்கலைக்கழக விவாதத்தின் போது பிரித்தானியா இந்தியாவின் வளங்களை எவ்வாறு சூறையாடியது என்பதை விளக்கினார்.

அவருடைய உரை வைரலாக மாறியது. அதுபற்றி பின்னர் அவர் ஒரு விரிவான நூலையும் எழுதியிருக்கிறார். இந்தியாவின் வளங்களை சூறையாடியதால்தான் அங்கு சுதந்திர போராட்டம் உக்கிரமாக இடம்பெற்றது. அப்போராட்டத்தை அடக்கவே பிரித்தானியா இலங்கை தீவை தனது கப்பல் படையின் முக்கிய தளமாக்கியது. அதற்காக தமிழீழ பகுதிகளை சிதைத்தது. சிங்களவர்களை ஆரியர்கள் என்று சொல்லி தமது கையில் போட்டு வைத்திருந்தது. இதுவெல்லாம் இனவழிப்பா என்று தெரியவில்லை.

குடியேற்ற காலனியம் வித்தியாசமானது. பெரும் தொகையாக ஐரோப்பியர்கள் குடியேறி அங்கு வாழ்ந்துகொண்டிருந்த பூர்வகுடி மக்களை இனவழிப்பு செய்த இடங்களே குடியேற்ற காலனிய இடங்கள். இது விவாதத்திற்கு உரியது அல்ல. குடியேற்ற காலனியம் என்றாலே இனவழிப்புடன் தான் இடம்பெறும்.Picture1 குடியேற்ற காலனியம்; இனவழிப்பின் இன்னொரு கரம் - ந.மாலதி

கனடாவிலும் ஐ-அரெிக்காவிலும் வாழ்ந்த பூர்வகுடிகள் இனவழிப்பு செய்யப்பட்டே இந்நாடுகள் உருவானது. இதுபோலத்தான் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும். அவுஸ்திரேலிய பூர்வகுடிகளின் இனவழிப்புடன்தான் அவுஸ்திரேலியா நாடு உருவானது. நியூசிலாந்தின் மயோரி மக்களின் இனவழிப்புடன்தான் நியூசிலாந்து நாடு உருவானது. இப்பூர்வகுடி இனங்களில் எஞ்சியிருப்பவர்கள் எல்லாம் இன்றும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இவர்களில் ஓரளவாதல் உரிமைகள் பெற்று வாழ்பவர்கள் என்றால் அது நியூசிலாந்து நாட்டின் மயோரி மக்கள்தான். இவையெல்லாம் நூற்றான்டுகளுக்கு முன்னர் நடந்தவை. இன்றும் வரலாறு அறிந்தவர்கள் இந்நாடுகளை குடியேற்ற காலனிய நாடுகள் என்றுதான் அழைப்பார்கள்.

லண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் டேமியன் ஷோர்ட் 2016இல் வெளியிட்ட நூல் (  Redefining Genocide: Settler Colonialism, Social Death and Ecocide)குடியேற்ற காலனியத்தை மையமாக வைத்து இனவழிப்பை வரையறை செய்வது பற்றி பேசுகிறது. குடியேற்ற காலனியம் எப்போதும் சமூக இறப்பையும், சூழல் அழிவையும் இனவழிப்பையும் கொண்டுவரும் என்கிறது இந்நூல்.

இக்கருத்துடன் தான் இன்று தமிழீழப் பகுதிகளில் இடம்பெறும் நில அபகிரிப்புக்களை நாம் கணிக்க வேண்டும். 2009 முன்னர் நடந்த இனவழிப்பு ஒருவகை. முள்ளிவாய்காலில் நடந்த இனவழிப்பு ஒருவகை.Land2 குடியேற்ற காலனியம்; இனவழிப்பின் இன்னொரு கரம் - ந.மாலதி

இப்போது நடப்பது குடியேற்ற காலனிய இனவழிப்பு. முந்தியவற்றைவிட இது அபாயமானது என்பது எமக்கு தெரியவேண்டும். எமக்காக பேசுபவர்கள் என்று சொல்லிக்கொண்டு இயங்கிவரும் சில தமிழரல்லாதவர்கள் ஈழத்தமிழ் இனவழிப்பை பகிரங்கமாக ஏற்க மறுக்கிறார்கள். ஐநா ஏற்றால்தான் இனவழிப்பு என்கிறார்கள்.

குடியேற்ற காலனியம் என்னும் இனவழிப்பு பற்றி பேசும் மேலே குறிப்பிட்ட பேராசிரிர் ஷார்ட்டின் நூலில், அவர் நான்கு இடங்களை உதாரணங்களாக எடுத்து தனது கருத்தை விளக்குகிறார். முதலாவதாக பாலஸ்தீனத்தை உதரணமாக எடுக்கிறார்.

ஐநா பாலஸ்தீன இனவழிப்பை ஏற்றுக்கொண்டதா? இல்லையே. இரண்டாவது உதாரணமாக எண்ணெய் உற்பத்திக்காக அகழப்படும் தார்மண் உள்ள கனடாவின் ஒரு பகுதியின் பூர்வகுடியினத்தை உதாரணமாக கையாளுகிறார். அவரின் மூன்றாவது உதாரணம் அவுஸ்திரேலியாவின் பூர்வகுடிகளின் இனவழிப்பபு. இவை ஐநாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையா? இல்லையே. அவரின் நான்காவது உதாரணம் தமிழீழத்தில் இடம்பெறும் குடியேற்ற காலனியம்.

இவை எதையும் ஐநா இனவழிப்பு என்று சொல்லவில்லையே? அப்படியானால் எமக்காக உழைக்கிறோம் என்று சொல்பவவர்கள் இந்த இனவழிப்புகள் எதையும் ஏற்க மாட்டார்களா? சிந்திப்போம்.