காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் உணர்ச்சிகரமான போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

உலகளாவிய ரீதியில் சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிண்றது அந்த வகையில், இன்று காலை 11 மணிக்கு வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைவாக வடமாகாணத்திற்கான மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ம் ஆண்டு முதல் வடக்கு கிழக்கு எங்கும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமக்கான நீதி இதுவரை கிடைக்காததனையடுத்து தமது உறவுகள் தொடர்பாக நீதி வழங்குமாறு சர்வதேசத்திடம் வலியுறுத்தி இன்று வடக்கு, கிழக்கில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வகையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகிய இன்று வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் சற்று முன்னர் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்து நடத்தினார்கள்.