கனடாவின் வடக்குப் பகுதியில் நோவா ஸ்காட்டியா நகரில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். காவல் துறையினர் போல் உடையணிந்து கொண்டு வாகனம் ஒன்றில் சுற்றி திரிந்த அந்த நபர் பலரது வீடுகளிலும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் 16 பேர் பலியான சம்பவம் அந்த நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்த சம்பவத்தில் பெண் போலீசார் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர். மற்றொரு காவலர் காயமடைந்து உள்ளார். உயிரிழந்த பெண் கான்ஸ்டபிள் ஹெய்தி ஸ்டீவன்சன் (வயது 23) என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதனை தொடர்ந்து தகவல் அறிந்து தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். 6க்கும் மேற்பட்ட காவல் துறை வாகனங்களும், ஹெலிகாப்டர்களும் இந்த பணியில் ஈடுபட்டன. இதன்பின்னர் நகரின் என்பீல்டு என்ற இடத்தில் கேஸ் நிலையத்தில் வைத்து அந்நபரை கண்டறிந்தனர்.
விசாரணையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர் கேப்ரியல் வார்ட்மேன் (வயது 51) என தெரிய வந்துள்ளது. அவரும் உயிரிழந்து விட்டார் என காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
அந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு தீயும் வைத்துள்ளார். இந்தத் தாக்குதல் அந்த நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாதது. போர்ட்டாபிக் என்ற சிறிய ஊரில் வீடுகளில் வெளியேயும் உள்ளேயும் ஆங்காங்கே உடலக்ள் சிதறிக் கிடந்தன. இந்த ஊர் ஹாலிபாக்ஸுக்கு 100 கிமீ தொலைவில் உள்ளது.
மற்ற இடங்களிலும் உடல்கள் கிடந்தன. முதலில் தன் விரோதியை இலக்கு வைத்து பிறகு கண்மூடித்தனமாக சுட்டிருக்க வேண்டும், துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பாக காவல் துறையினர் குடியிருப்பு வாசிகளுக்கு எச்சரிக்கும் விதமாக கதவுகளைப் பூட்டிக் கொண்டு இருக்குமாறு எச்சரித்தனர். இப்பகுதியில் பல வீடுகளுக்கு தீயும் வைக்கப்பட்டுள்ளது.