உலக சுகாதார அமைப்பிற்கு சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் ஐ.நா. வலியுறுத்தல்

கொரோனா நோய்த் தொற்று பரவலுக்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச நாடுகள் உலக சுகாதார அமைப்பிற்கு உதவ முன்வர வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ஐ.நா.அமைப்பின பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறுகையில், “உலகில் பரவி வரும் நோய் அச்சுறுத்தல்களுக்கு எதிரான போராட்டத்தில் ஐ.நா. பிரிவுகளுக்கு உறுப்பு நாடுகள் ஆதரவு அளிக்க வேண்டும். தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளும் அதில் அடங்கும். முக்கியமாக, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உலக சுகாதார அமைப்புகளுக்கு ஐ.நா. உறுப்பு நாடுகள் உதவ வேண்டும் என்றார்.

கொரோனா தொற்று தொடர்பாக சீன அரசிற்கு உலக சுகாதார அமைப்பு செயற்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகின்றார்.  இது தொடர்பாக பல உண்மைகள் தெரிந்திருந்தும் அவற்றை அமெரிக்காவிடமிருந்து உலக சுகாதார அமைப்பு மறைக்கிறது என்றும் கூறினார்.

மேலும் உலக சுகாதார அமைப்பிற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியுதவியை தற்காலிகமாக நிறுது்தி வைக்க ட்ரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார். அதனையடுத்து, சீனாவின் பிடியிலிருந்து உலக சுகாதார அமைப்பு இன்னும் 30 நாடகளுக்குள் விடுபடாவிட்டால், அந்த அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகும் என்றும் கடந்த மே மாதம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் உலக சுகாதார அமைப்பிற்கு உறுப்பு நாடுகள் உதவ வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.