ஈழத் தமிழரின் அதிகாரப் பகிர்வு தொடர்பான கோத்தபயாவின் பேட்டிக்கு ஸ்டாலின் கண்டனம்

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்வது தமது முன்னுரிமை இல்லை என்று கோத்தபயா ராஜபக்ஸ தெரிவித்துள்ளமைக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்வது எனது முன்னுரிமை இல்லை என்றும், பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்திற்கு எதிராக, ஈழத் தமிழர்களுக்கு அதிகாரத்தில் பகிர்வு அளிக்க இயலவில்லை என்றும் கோத்தபா ராஜபக்ஸ த இந்து ஆங்கில நாளிதளுக்கு அளித்த ஆதிக்கவாதப் பேட்டியில் கூறியிருந்தார்.

இலங்கையில் வாழும் மக்கள் அனைவரையும் சமமாகக் கருதுகின்றேன் என்று கூறிய கோத்தபயா, இந்திய பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் பேட்டியளித்திருப்பது மிகவும் கவலையளிக்கின்றது என்கின்றனர் தமிழர் ஆதரவு நிலைப்பாட்டினர்.

பெரும்பான்மை, சிறுபான்மை என்று பிளவுபடுத்தி, பிரித்துப் பேசுவது அவர் மனதை எது ஆட்கொண்டுள்ளது என்பதற்கான அறிகுறியே தவிர, மக்களாட்சியைப் போற்றுவதாகாது. இந்திய பிரதமர் மோடி உடனடியாகத் தலையிட்டு, இலங்கையில் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு கிடைத்து, அவர்கள் கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.