இலங்கையின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

இலங்கைக்கு அண்மையாக (இலங்கைக்கு தெற்காக) விருத்தியடைந்த குறைந்த மட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று இரவிலிருந்து (குறிப்பாக டிசம்பர் 04ஆம், 05ஆம் திகதிகளில்) அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும்,

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு, நுவரெலியா, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் மாத்தளை, கண்டி, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் (அனுராதபுரம், பொலன்னறுவை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை மற்றும் கொழும்பு) சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக வடமேல், தென், மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையின் ஏழு மாவட்டங்களுக்கு இன்று பிற்பகல் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.