ஆயுதம் தூக்கியோரை தெற்கில் நினைவுகூர முடியமென்றால் ஏன், வடக்கில் முடியாது? மனோ

1970/80 களில் இலங்கை அரசுக்கும்,  இராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய, ஜேவிபியின் தேசப்பிரேமி இயக்க போராளிகள் இன்று தெற்கில் பகிரங்கமாக நினைவுகூரப்படும் போது, அதே வரப்பிரசாதம் வடக்கில் தமிழருக்கு இல்லை? இதனால், இந்த அரசாங்கம் இப்போது அடிக்கடி சொல்லும், “ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஒரு கேலிக்கூத்தாக தெரிகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மனோ எம்.பி மேலும் கூறியுள்ளதாவது,

அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்குபவர்களை அரசாங்கம் தனது கணிப்பீட்டின்படி ‘பயங்கரவாதிகள்’ என்கிறது. அப்படியானால், 1970ஆம் , 80ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசுக்கும், ராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய ஜேவிபியின் தேசப்பிரேமி இயக்க போராளிகள், “சிங்கள பயங்கரவாதிகள்கள்” ஆவர். இவர்கள் வருடா வருடம், தெற்கில் பகிரங்கமாக நினைவுகூரப்படுகிறார்கள்.

ஆனால், அதே வரப்பிரசாதம், தமிழர்களுக்கு இல்லை. “தமிழ் பயங்கரவாதிகள்” என்ற தமிழ் ஆயுததாரிகளை மட்டுமல்ல, பலவேளைகளில் மரணித்த சாதாரண மக்களையே பகிரங்கமாக நினைவு கூர, தமிழர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இது இந்நாட்டில் நீண்ட நாட்களாக நடந்து வரும் ஒரு இரட்டை நிலைப்பாடு கொண்ட பாரபட்ச கொள்கை ஆகும். இதற்கு இடையில் இன்று இந்த அரசு, மேலும் ஒரு கொள்கையை பற்றி பேசி வருகிறது. அதுதான், “ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஆகும். இது இந்நிலைமையை இன்னமும் கேலிக்கூத்தாக மாற்றி உள்ளது.

அதாவது, மறைந்த தமது உறவுகளை தமிழர் நினைவுகூருவது மறுக்கபடுவதும், அதே உரிமை சிங்களவருக்கு வழங்கப்படுவதும், இந்நாட்டில் அரசின் இரட்டை கொள்கையின் அடிப்படையில் கேலிக்கூத்தாக அமைகிறது. மறுபுறம் தமிழ் மக்களை பொறுத்தவரையில் இது பெரும் சோகமாக அமைகிறது.

இந்த இரட்டை கொள்கை உடன் முடிவுக்கு வரவேண்டும். இதுபற்றி தேசிய கலந்துரையாடல் நடைபெற வேண்டும். இதுபற்றி எவருடன் வேண்டுமென்றாலும், மூன்று மொழிகளிலும் பகிரங்க விவாதம் நடத்த நான் தயார்” என்று கூறியுள்ளார்.