ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறப்போவதில்லை – லீலாதேவி

இலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் பதவியேற்றாலும் தமக்கான தீர்வு கிடைக்கப்போவதில்லையென காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் 8 மாவட்டங்களுக்கான தலைவர், செயலாளர் கூட்டம் இன்று (02) வவுனியாவில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே கிளிநொச்சி மாவட்ட செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையின் ஜனாதிபதியாக யார் வந்தாலும் தமக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன தமது உறவுகளை கண்டறிந்து தருவாரென தமிழ் தலைமைகள் கூறியதாலும் தமக்கிருந்த நப்பாசையினாலுமே அவருக்கு வாக்களித்ததாக தெரிவித்தார்.

எனினும் ஆட்சிக்கு வந்தததன் பின்னர் அவரும் தம்மை ஏமாற்றிவிட்டதாக தெரிவித்தார்.

அதேபோலவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்த விடயத்தை மறப்போம் மன்னிப்போமென தெரிவித்து விட்டதாகவும் இதனால் இனிமேல் சிங்கள தலைவர்கள் மாத்திரமல்ல தமிழர்கள் ஜனாதிபதியாக வந்தாலும் அவர்களை நம்ப தாம் தயாராக இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.